05/06/2022
சுற்றுசூழல் தினத்தில் கடலும்; காந்தியடிகளும்;
"எனக்கு இயற்கையை தவிர வேறு எந்த உத்வேகமும் தேவையில்லை. அவள் என்னை இதுவரை தவறவிட்டதில்லை. அவள் என்னை மயக்குகிறாள், என்னைக் குழப்புகிறாள், என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறாள்." காந்தியடிகளின் இந்த வாக்கியம் மானுடத்தின் அகம், புறம் இவ்விரண்டிற்குமான புரிதலை இயற்கை என்னும் ஆசானிடம் பெறமுடியும் என்கிறார் காந்திஜி.காந்திய சிந்தனைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சுற்றுப்புற சூழல் தினத்திற்கான மையக்கரு "இயற்கையுடன் இணக்கமாக வாழ்வது". அவர் கைராட்டினம் சுற்றுவது தொடங்கி, அவர் உண்ணும் எளிய உணவைக் கடந்து, அவர் தவிர்த்த விமான பயணங்கள் எல்லாம் இயற்கையுடன் இனக்கமாக அவர் எடுத்த எளிய முயற்சிகள், இன்றைய சூழலியல் மாற்றங்களுக்கு இன்றியமையாத தீர்வுகளாக உள்ளன.
தண்டி யாத்திரை மீது நம்பிக்கை கொண்ட காந்திக்கு தெரியாது, அவர் கரைத்த உப்புடன் இன்று 51 லட்சம் கோடி மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன என்றும்.அவர் நேசித்த வலசை பறவைகள் எல்லாம் இன்று திசை மாறிச்சென்றுகொண்டு உள்ளன. என்றும். கப்பல் பயணங்களில் அவர் ரசித்த கடல் எல்லாம் இன்று எண்ணெய் படலமாக மாறி கொண்டு உள்ளது என்றும். ஆக, இந்தக் கடலுக்கு என்னதான் ஆச்சு!? காலநிலைமாற்றம், புவிவெப்பமயமாதல், பனிக்கட்டி உருகுதல், மாசுபாடு போன்ற செயல்களின் கடைசி அச்சாணி கடல் தான். மானுடத்தின் தவறுகளையும், பிழைகளையும், பேராசைகளையும் தான் எல்லையை கடந்து தாங்கிக்கொண்டு இருக்கிறாள் கடல் தாய்.
இது ஒருபுறம் இருக்க, வேதாரண்யத்தில் ராஜாஜி உப்பு கரைத்த பொது கோடியகரையில் இருந்து தொடங்கி, ஆத்திரம்பட்டினம் வரை இருந்த அலையாத்தி காடுகள் இன்று 70% புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட களிமண் நிறைந்த கடலோர பகுதிகளில் உப்பு நீரில் வளர்வது சதுப்பு நிலக் காடுகள் (Mangroves) எனும் அலையாத்திக் காடுகள். இங்கு தினமும் வரும் மூத்த குடிகளான வடிகால் மீனவர்கள் , பாரம்பரிய பரிசார் முறையில் மீன்பிடிக்கின்றனர், இது அவர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் வளர்க்கவில்லை, சதுப்பு நிலக் காடுகலையும் வளர்க்கின்றனர். இந்த பாரம்பரிய மீனவர்களை ஒன்றிணைத்து அவர்களின் இயற்கையுடன் ஒன்றிய வாழ்வியலையும், வாழ்வாதாரதயும் பாதுகாக்கும் பொருட்டு தானம் அறக்கட்டளையின் "கடல்புரா பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்" மூலம் ஐம்பதுக்கும் மேற்பட்ட அலையாத்திக் காடுகளின் வடிகால்களை தூர்வாரியுள்ளனர். இதன் மூலம் அலையாத்தி காடுகள் பல உயிர்பெற்று உள்ளன. அதே சமயத்தில் சில முதலாளிகள் செயற்கையான இறால் பண்ணை என்னும் பெயரில், லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு பல இரசாயனங்களை கடலில் கரைத்து கலகப்படுகின்றனர். பல சமயங்களில் எளியவர்கள் இயற்கையின் சமநிலைக்கு பாடுபடுகின்றனர், ஆனால் வலியவர்கள் அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.அண்ணல் கூறியதை போல்: "பூமியில் நமது தேவைக்கு போதுமான வளங்கள் உள்ளன ஆனால் நமது பேராசைக்கு இல்லை". ஆக, காந்தியடிகளின் சிந்தனைகள் காலஓட்டத்தில் வலுப்பெற்று, வாழ்வை கடந்து ,வாழ்வியலாக மாறிக்கொண்டுதான் உள்ளது. ஆகையால் அண்ணலை வாசியுங்கள், இயற்கையாகவே இயற்கையை வாழவிடுவீர்கள்.